Friday, November 11, 2011

என்னை ஏதோ செய்கிறாள் - இறுதி பாகம் - கிரைம் தொடர்

காலை நேரம். பள்ளி ஆரம்பிக்க இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்ததால் ,
அந்த  பிரபல பள்ளியின் வாசலில் மாணவர்கள், அவர்களை ட்ராப் செய்ய வந்த பெற்றோர்கள் என்று ஒரே பர பரப்பாக இருந்தது.

 பள்ளி இருந்த தெருவுக்கு அடுத்த தெருவில் 'ஜீப்பை' நிறுத்திவிட்டு இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் கான்ஸ்டபில் ராம் மப்டியில்
அந்த பள்ளியை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

வகுப்பு ஆரம்பிக்கும் இரெண்டாவது மணி அடித்தவுடன், வாசல் துடைத்து விட்டதைப் போல் சுத்தமாக, ஒரு தலை கூட கண்ணில் படாதபடி மாணவர்கள் மாயமாய் மறைந்து விட்டனர்.

இன்ஸ்பெக்டர் கணேஷ் பள்ளி முதல்வரின் அறை எங்கே உள்ளது என்று விசாரித்து, அதனுள் கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தனர்.

அவர்கள் இருவரையும் பார்த்த பள்ளி முதல்வர், 'யாரென்று' கேள்வி தொனிக்கும் முக பாவத்தில் அவர்களைப் பார்க்க, இன்ஸ்பெக்டர் தன் அடையாள அட்டையை காட்டிவிட்டு , வந்த விசயத்தை சுருக்கமாகச் சொன்னார். பள்ளி முதல்வர் 'பெல்' ஒலித்து , ப்யூனை வரவழைத்து ,

"போய், கலா மிஸ்ஸை வரச் சொல்லுப்பா" என்றார்.

    ௦௦௦௦((((((((((௦௦௦௦௦௦௦௦௦௦௦LOL

கலா மிஸ் , பிள்ளைகளுக்கு , திருவள்ளுவரைப் பற்றியும் ,அவர் குறள்களின் சிறப்புகளையும் அவர்களுக்கு புரியும் வண்ணம் எளிய தமிழில்
கதை சொல்லி பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.ப்யூன் வந்து அழைத்தவுடன் , பிள்ளைகளுக்கு உடனடி அசைன்மென்ட்டாக ஒரு குறளை போர்டில் எழுதிவிட்டு , அதன் அர்த்தத்தை அமைதியாக யோசித்துக்கொண்டிருங்கள் என்று சொல்லிவிட்டு , ஒரு வித பதட்டத்துடன் முதல்வர் அறையினுள் நுழைந்தாள்.

அவளைப் பார்த்தவுடன் முதல்வரை முந்திக் கொண்டு இன்ஸ்பெக்டர் கணேஷ்,
  "நீங்க தான் கலாவா?"
  "ஆமா, நீங்க? " என்று தயக்கத்துடன் கலா.
 "இந்த போட்டோ ,நீங்க தான 'ப்ளோ அப்' செய்ய கொடுத்துர்ந்தீங்க?" என்று
ஒரு பெரிய போட்டோவும் , அதனுடன் ஒரு கடிதத்தையும் கொடுத்தார் இன்ஸ்பெக்டர்.

அந்த போட்டோவில், சஞ்சனாவும் ,  கலாவும் இருக்க , சஞ்சனாவின் கையில் ஒரு வெற்றிக் கோப்பை. (ஆமாம் அதே போட்டோ , அவள் வீட்டில் முன்பு கணேஷ் பார்த்தது).  அந்த கடிதத்தில்,

"உங்களுக்கும் , சஞ்சனா,MLA  மற்றும் ஜமுனா கொலைகளுக்கும் தொடர்பு உள்ளது என்று நம்புகிறோம். நீங்கள் ஜமுனா வீட்டில் விட்டுச் சென்ற போட்டோ கலக்சன் ரெசிப்ட் எங்களுக்கு உங்களை கண்டுபிடிக்க உதவியது. நீங்கள் முவரும் இருந்த போட்டோவில் ,ஏன் ஜமுனாவை கிராப் செய்துவிட்டு,உங்கள் இருவரின் உருவம் மட்டும் இருக்குமாறு 'ப்ளோ அப்'  செய்யச் சொன்னீர்கள்' என்று எனக்கு தெரிய வேண்டும். நீங்களாக முன் வந்து நடந்த உண்மைகளை சொன்னால் உங்களுக்கு நல்லது. இந்த பள்ளியில் உங்களை விசாரிக்காமல் , ஸ்டேசனில் விசாரிக்க விரும்புகிறோம். புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்பை எதிர் பார்க்கிறோம்".

இப்படிக்கு,
இன்ஸ்பெக்டர் கணேஷ்

அந்த கடிதத்தை படித்தவுடன், காலாவிற்கு  நெற்றியில் வேர்க்க ஆரம்பிக்க, அவள் தொண்டையில் குரல்வளை மேலும் கீழும் ஏறி இறங்க ஆரம்பித்தன. திடீரென்று பலமாக இருமத் தொடங்கினாள். அவள் இருமல் அடங்காமல் வந்து கொண்டே இருந்தது. அவள் பள்ளி முதல்வரைப் பார்த்து திக்கி திணறி, 'பை...மாத்திரை' என்றாள்.

பள்ளி முதல்வர் மறுபடியும் ப்யூனை கூப்பிட்டு, 'ஸ்டாப் ரூம் போய் , கலா மிஸ் கைப்பைய உடனே எடுத்துட்டு வாங்க, சீக்கிரம்' என்று கட்டளையிட்டாள். ப்யூன் கொண்டு வந்து தந்த பையை வாங்கிய இன்ஸ்பெக்டர் கணேஷ், 'என்ன புதுசா டிராமா போடுறா' என்ற ரீதியில் அவளிடம் கொடுக்கலாமா ,வேண்டாமா என்ற தொனியில் கலாவைப் பார்க்க,
 'சார் ப்ளீஸ் மாத்திரை போடணும் , இப்படி கொடுங்க என் பையை' என்று இருமிக் கொண்டே கெஞ்சினாள்.

முதல்வர், 'சார் ப்ளீஸ் கொடுங்க, அவங்களுக்கு இந்த இருமல் கம்ப்ளைன்ட் இருக்குறத முன்னாலேயே எனக்கு சொல்லி இருக்காங்க, மாத்திரைய போட விடுங்க ப்ளீஸ்' என்று அவளுக்கு வக்காலத்து வாங்க , வேறு வழியில்லாமல் அவளிடம் பையை கொடுத்தார் இன்ஸ்பெக்டர்.

வேகமாக பையில் இருந்து எதையோ எடுத்து முழுங்கிய கலா, சிறிது நேரத்தில் ஆசுவாசம் அடைந்து, இன்ஸ்பெக்டரை பார்த்து ,
"சார் ,என்னை மன்னிச்சிடுங்க, நான் நடந்த உண்மையை சொல்லிடுறேன்.இங்கயே இப்பவே சொல்லிடுறேன்" என்றவள் தொடர்ந்து,

"நான்,சஞ்சனா,ஜமுனா மூவரும் திக் பிரண்ட்ஸ். எங்கள் மூவருக்கும் திருக்குறள் என்றாள் உயிர். எங்களுக்குள்ள எந்த நல்லது /  பொல்லாதது    நடந்தாலும் , அதுக்கு  ஏத்த மாதிரி ஒரு குறள் சொல்லிக்கிறது எங்க வழக்கம்.

அந்தளவுக்கு நாங்க திருக்குறள் சொல்றதுல எக்ஸ்பெர்ட். நாங்க படிச்சது ஒரு கோ -எட் காலஜ். அங்க எங்க நட்பு வட்டாரத்தில் இருந்தவர் தான் இறந்துபோன எம்.எல்.ஏ தயாளன்.

ஜமுனா ஓவரா ஜெலஸ் உடைய கேரக்டர். என்ன தான் நாங்க மூணு பேர் நல்ல நட்போட பழகினாலும், சஞ்சனாவோட தமிழ் கவிதை எழுதும் திறமை , மற்ற எல்லா விசயங்கள்ளையும் அவளே முதலா இருக்கிறது ஜமுனாவுக்கு எப்பவுமே கொஞ்சம் எரிச்சல்."

--என்றவள் 'சார்,எனக்கு கொஞ்சம் தள்ளாடுது, நிக்க முடியல. நான் உக்காந்துகிட்டே  சொல்லட்டுமா? ' என்று கணேசைப் பார்த்து கேட்டாள்.

அவளை உக்காரச் சொல்லிவிட்டு, 'மேல சொல்லுங்க' என்றார் இன்ஸ்பெக்டர்.

"தயாளன் , சஞ்சனாவ அடிக்கடி பாராட்டி பேசுறது ஜமுனாவுக்கு சுத்தமா பிடிக்கலை. எப்படியோ தயாளனை தன்னை காதலிக்க வச்சுட்டா ஜமுனா.
ஆனாலும் தயாளன்  சஞ்சனாவ பாராட்டுறத நிப்பாட்டல. அது சஞ்சனா மேல ஜமுனா வச்சுக்கிட்டுருந்த கோபத்த அதிகமாக்கிச்சி."

"அப்புறம் எங்க காலஜ் படிப்பு முடிஞ்சி, சஞ்சனாவுக்கு கல்யாணம் ஆச்சி.
  சஞ்சனாவோட புருஷன் துபாய் போயிட்டதால ,சஞ்சனா பொழுது போறதுக்கு ப்ளாக் ஆரம்பிச்சி அதுல தன்னோட தமிழ் திறமய எழுத்து மூலமா நிரூபிசிக்கிட்டுருந்தா. அத அப்பப்ப எங்களுக்கும்
face book  ல ஷேர் பண்ணிக்குவா. அப்ப தான் , தயாளனும் , அவளோட face book  ல ஜாயின் பண்ணாரு. அவளோட wall ல அவர் கமெண்ட் போடுறது ,பாராட்றது அப்படின்னு அவங்க நட்பு மறுபடியும் வளர்ந்தது ஜமுனாவுக்கு சுத்தமா பிடிக்கல."

மேலும் கொஞ்சம் தண்ணியை குடித்துவிட்டு, கலா தொடர்ந்தாள்:

"இடையில ,தயாளன் அரசியல்ல இறங்கி கொஞ்சம் கொஞ்சமா பிரபலம் அடஞ்சுகிட்டு வந்தாரு. அவரோட அரசியல் வளர்ச்சிய கருதி, ஜமுனாவ விட்டுட்டு வேற பெரிய பின்னணி உள்ள பொண்ண கல்யாணம் செஞ்சிகிட்டார்,ஆனா அதுக்கு சஞ்சனா தான் காரணமின்னு தப்பா நினச்ச ஜமுனா, அவங்க ரெண்டு பேருக்கும் தொடர்பு இருக்கிறதா கதை கட்டி அவங்கள பழி வாங்க நினைச்சா. அவங்க face book கம்மன்ட்ச்களை , வெட்டி , ஒட்டி ,தப்பான அர்த்தம் வர்ற மாதிரி ஸ்க்ரீன் சாட் தயார் செஞ்சு, அத சஞ்சனா புருஷன் மெயில் ஐ டீ க்கு அனுப்ப போறதா மிரட்டி இருக்கா. அத தாங்க முடியாம தான் அவ தூக்கு மாட்டி செத்துப் போயிட்டா. "

"அப்ப MLA தயாளான யார் கொன்னது" என்று ஆர்வத்துடன் கணேஷ் கேக்க, கலா தொடர்ந்தாள்.

"தான் எதிர்பார்த்தபடி சஞ்சனா செத்துட்டதால மகிழ்ச்சி அடைஞ்சாலும் ஜமுனாவுக்கு அது பத்தாம, தயாளனை சிக்க வைக்கனுமின்னு அவன் வீட்டுக்கு போய் மிறட்டுரப்ப வந்த தகராருல , அவனையும் கொன்னுட்டா".

"அப்ப ஜமுனா ஏன் சாகனும்,அவ தற்கொலை பண்ணிகிட்டாளா?" என்று ஆர்வம் மிகுதியில் பள்ளி முதல்வர் கேட்க 'இல்ல மேடம்' என்று தலையை ஆட்டினாள் கலா.

மெல்ல அவள் நினைவு அன்று நடந்ததை ரீவைண்டு பண்ணி பார்த்தது:

ஜமுனாவின் செல் போன் 'மின்சாரக் கண்ணா,என் மன்னா' என்று ரிங் டோனுடன் அழைக்க , அதை எடுத்து ஹல்லோ சொன்னவுடன்,

 " ஹாய் ஜமுனா,நான் தாண்டி கலா பேசுறேன்"
"ஹாய் டீ, எப்படி இருக்க கலா?"
 "ஹ்ம்ம், சஞ்சனா விஷயம் கேள்விப் பட்டையா?"
"ஹ்ம்ம் , கேள்விப்பட்டேன்,இப்ப தான் எனக்கு சந்தோசம்"
" என்னடி இப்படிச் சொல்ற?"
"அப்புறம் அவளைப் பாத்தாலே கொல்லனும் போல இருக்கும் இப்ப அவளே போயி சேந்துட்டா, அவ போட்ட ஆட்டத்துக்கு சரியான தண்டனை "
"ச்சே போடி நீ இன்னும் திருந்தவே இல்ல" என்று கலா கோபத்துடன் போனை வைத்தாள். சஞ்சனா நினைவாக அவள் போட்டோவை பெரிது படுத்தி மாட்டனும் என்று நினைத்தவள் , 'அவர்கள் மூன்று பேர் இருக்கும் சஞ்சனாவின் திருக்குறள் போட்டியின் போது எடுத்த அந்த போட்டோவை எடுத்துக் கொண்டு கடைக்கு சென்று,` தான் மற்றும் சஞ்சனா மட்டும் இருக்குமாறு பெரிது படுத்த ஸ்டுடியோவில்  ஆர்டர் கொடுத்துவிட்டு வெளியே வந்தாள்.

அப்போது கலாவின் செல் போன் ஒலிக்க, மறு முனையில் ஜமுனா.

"டீ கலா, என்னடி கோபப் பட்டு போனை வச்சுட்ட, மறுபடியும் கூபிடுவன்னு பார்த்தேன் ,கூப்பிடல"
"எனக்கு உன் மேல கோபம்"
"சரிடி, நீ எங்க இருக்க, ப்ரீயா இருந்தா என் வீட்டுக்கு வாயேன் , நாம இதப் பத்தி டீடைல் ஆக பேசலாம்,நான் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் தரப் போறேன்" என்று வற்புறுத்திக் கூப்பிட,கலாவும் அவள் வீட்டிற்கு போனாள்.

பேச்சு சுவராசியத்தில், ஜமுனா நடந்த உண்மைகளை சொல்லிவிட, கோபத்தில் ஜமுனாவை தள்ளிய கலாவிற்கு அவள் அப்படி பொட்டென்று செத்துப் போவாள் என்று கனவில் கூட நினைக்கவில்லை. ஜமுனாவிற்கு புத்தி சொல்லும் விதமாக அவளும் ஒரு குறளை எழுதி விட்டு போய் விட்டாள்.

ரீவைண்ட் முடிந்த கலா, ப்ரின்சிபல் மேடத்தை பார்த்து,

 'நான் எதிர்பாரா விதமா அவள கொன்னுட்டேன் மேடம் ' என்று அழ ஆரம்பித்தாள்.

திடீர் என்று அவள் வாயில் இருந்து நுரை தள்ள, 'இன்ஸ்பெக்டர் , நான் விச மாத்திரை சாப்பிட்டுட்டேன்.எனக்கு எப்படியும் தண்டனை கிடைக்கும் , நான் இதுக்கு மேல உயிர் வாழ விரும்பல' என்று மயங்கிச் சரிந்தாள்.


கலா மிஸ்ஸின் வகுப்பில் இருந்த மாணவர்கள் டீச்சர் இன்னும் வரலையே என்று வாசலைப் பார்த்துகொண்டு ,போர்டில் இருந்த குறளின் அர்த்தமும் புரியாததால் , கூச்சல் போடத் தொடங்கினர். அந்த போர்டில் இருந்த குறள் கலா மிஸ் எதிர்பார்க்காமலே அவளுக்கு நடந்த செயலுக்கு பொருத்தமாக அமைந்து விட்டது. அந்த குறள் இது தான்:


அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை
 எல்லாந்  தரும்.

இந்த குறள் ஓரளவுக்குப் புரிந்தாலும் , புரியாதவர்களுக்கு, விளக்கம் இதோ :

எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல்
தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.





--முற்றும்.



4 comments:

  1. எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல்
    தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.

    அருமையான குறல் விளக்கக் கதைக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. அருமையானதொரு தொடர் நன்பரே!!! திருக்குறளை வைத்தே அசத்தி இருக்கிறீர்கள்...

    ReplyDelete
  3. @இராஜராஜேஸ்வரி
    @Mohamed Faaique
    @All my followers

    நன்றி , உங்கள் ஊக்கம் என்னை இன்னும் எழுதத் தூண்டுகிறது, தொடர்ந்து ஊக்குவிக்கும்
    உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் பல!

    ReplyDelete
  4. இன்று தான் உங்கள் பதிவை படிக்க ஆரம்பிதேன்....அட்டகாசம் .....நல்ல கற்பனை...

    தொடருங்கள் .. காத்துஇருக்கிறோம்

    ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)