Thursday, May 23, 2013

வில்லாதி வில்லனும் , ஒரு நாயரும்,நாதஸ்வர சீரியலும்!!!

சென்னை விமான நிலையத்தில் இருந்து என் தற்போதைய நாட்டிற்க்கு செல்வதற்காக காத்துக் கொண்டிருந்தேன். எதுக்கும் இருக்கட்டும் என்று மூன்று மணி நேரம் முன்னமே சென்றதால் , அங்கும் இங்கும் விமான நிலையத்தினுள் அலைந்து நேரத்தை கொலை செய்து கொண்டிருந்தேன்.  அப்போது என் கண்ணில் பட்டது , ஹிக்கின் பாதம்ஸ் , சரி கொஞ்ச நேரம் , புத்தகம் மேயலாம் என்று உள்ளே சென்றேன். 

மேய்ச்சலின் போது ஞாபகம் வந்தது , நம் கவிபேரரசு வின்  'ஆயிரம் பாடல்கள் ' புத்தகம் வாங்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தது , என் அதிர்ஷ்டம் , அந்த புத்தகம் அங்கே இருந்தது ...விலை ஆறு நூறாக இருந்த போதிலும் வாங்கிக் கொண்டேன் , அந்த வைர முத்துவுக்காக...

அதில் ஒவ்வொரு சினிமா பாடல் எழுதும் முன் , எந்த கதைச் சூழ் நிலைக்காக அந்த பாடல் படத்தில் இடம் பெற்றதென்பதை முதலில் விவரித்து பின் பாடல் வரிகளை தொடுத்திருந்தார்கள் ...

அதை மேல் வாரியாக வாசித்த பொழுது , ஒரு படத்தின் பாடல் கண்ணில் பட்டது. அது சத்யராஜ் முதலில் இயக்கி நடித்த ,வில்லாதி வில்லன் என்ற மொக்கப் படத்தின் பாடலுக்கான சூழல் ... அதற்கான அறிமுக வரிகள் இவ்வாறு தலைவர் எழுதி இருந்தார்;

வாய்மொழியை மூலதனமாக கொண்ட வழக்கறிஞர் ஒருவரின் சமூக விமர்சனம் என்பதே பாடலுக்கான சிச்சு வேஷன்.

அதற்காக கவிஞர் எழுதிய 'வாய்மையே வெல்லும்' என்று தொடங்கும் பாடலில் , ஒரு சரணத்தைப் படித்தவுடன் , அன்று காலை பெங்களூருவில் இருந்து பஸ்ஸில் வந்தபோது கேட்ட சம்பவம் நினைவுக்கு வந்தது , முதலில் அந்த சரணம் ;

பொண்ணும் ஆணும் திருமணம் செய்வது 
ப்ரோக்கர் கொண்ட வாயாலே - பின் 
ஆணும் பெண்ணும் பிரிந்து வாழ்வது 
அவரவர் கொண்ட வாயாலே

அந்த பஸ் சம்பவம் என்னவென்றால் , என் பின் சீட்டில் ஒரு அப்பாவும் ,பையனும் இருந்தார்கள். அந்த அப்பா பையனுக்கு பொறுமையாக சாப்பிட ஏதோ கொடுத்துக் கொண்டிருந்தார். பின் அவருக்கு வந்த போன் காலில் இருந்து அவர் சம்சாரித்ததை வைத்துதான் அவர் ஒரு பாலக் காட்டு நாயராக்கும் என்று தெரிந்து கொண்டேன்.

முதலில் வந்த காலில் அவர்கள் மலையாளத்தில் சம்சாரித்து கொண்டதில் நான் கிரகித்து கொண்டது ;  இந்த மலையாளிக்கும் அவர் மனைவிக்கும்  ஏதோ தகராறு , விவாகரத்து வரை நீண்டு விட்டது போல ,  கூப்பிட்டவர்  இருவருக்கும் சொந்தம் போல , அதனால் இவர் அவரிடம் ,  'இந்த பிரச்சனிக்கு மூல காரணம் என் மனைவி யின் அம்மாதான் , என் மனைவி என்னிடம் வந்து சேர்வாள் என்று நான் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்' என்று பேசினார் அந்த நாயர்.

கொஞ்ச நேரம் கழித்து வேறு ஒரு அழைப்பு வந்தது , இம்முறை , நாயரின் சொந்தம் போல ;
நாயர் அவரிடம் , 'என் மாமனார் ஒரு முக்காக் கிறுக்கன் ,அவன் மனுசனே இல்ல என்று ஏதோதோ சொல்லிவிட்டு , என் லாயர் எப்படியும் என் மகன் என் கஸ்டடியில் வர வழி செய்வதாக சொல்லி இருக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருந்தார் ...

அந்த அழைப்பு முடிந்தவுடன் , அந்த பய்யன் பேச ஆரம்பித்தான் ..அவன் பேசுவது ஒரு பெண் குழந்தை பேசுவது போலவே இருந்தது ...அதுவும் நடிகை சாலினி சிறு வயதில் கொஞ்சிப் பேசுவாளே அதுமாதிரி ...அந்தப் பய்யன் கொஞ்சியது ....

அப்பா சென்னையில் மால் இருக்குமா ...
ஓ  பெரிய பெரிய மால் இருக்கே -அவன் அப்பா நாயர் 
என்ன கலரில் இருக்கும்ப்பா ...
எல்லா கலரில் இருக்கும் ...
பிங்க் கலரில் இருக்குமா ...
இருக்கும்...
அச்சனும்  அம்மையும் கல்யாணம் செய்தப்ப , அம்மை போட்டிருந்த சேலை கலரில் இருக்கும்மா  என்றான் சிறுவன் ;
இருக்கும் ,உனக்கு எப்படித் தெரியும் அந்த கலர் ...
நான் வீடியோ  வுல பார்த்தேன் ...
யார் காமிச்சா ...
அம்மா பாட்டி ..
அவங்க கூட இனிமே பேசாத , அவங்க நல்லவங்க இல்லை.

எனக்கு அந்த சிறுவன் அம்மாவை மிஸ் பண்ணுவது மட்டும் புரிந்தது.  நாயரின் நடவடிக்கைகள் அவர் ஒரு பேசத் தெரிந்த காரிய வாதி என்பதும் புரிந்தது...நான் நினைக்றேன் , நாயருக்கும் அவர் மனைவிக்கும் சண்டை வந்ததே , நான் மேல குறிப்பிட்ட பாடலில் தலைவர் எழுதிய பின் வரும் மற்றொரு சரணத்தின் கருப் பொருளே காரணம் என்று ;


மண்ணில் மனிதன் பிறப்பது மட்டும் 
மாதா என்னும் தாயாலே - பின் 
நன்மை தீமை இரண்டும் அடைவது 
 நாக்குத் துடிக்கும் வாயாலே 


மேலும் நாதஸ்வரம் சீரியலில் வந்த இந்த காமடியும் கூடவே நினைவுக்கு வந்தது, பாருங்கள் அந்த காமடியை இங்கே;



நாக்கின் துடுக்கு எவ்வளவு கொடுமை செய்யும் என்று நன்கறியலாம் இந்த காணொளியின் மூலமாக.

அப்புறம் சும்மா சொல்லக் கூடாது , தலைவர் வரிகள் ஒவ்வொரு பாட்டுக்கும் சூப்பர் , அவர் நல்ல வரிகள் எழுதியும் பல பாடல்களில் இசை அம்முக்கி விடுவதால்  அதை நம்மக்கு இந்த மாதிரி அச்சில் படிக்கும் போதுதான் அதன் அருமை தெரிகிறது.

கவிஞர் மறக்காமல் , தன்னை சினிமாவில் அறிமுகப் படுத்திய இளையராசவுக்கும் , பாரதி ராசாவுக்கும் , நன்றியை தெரிவித்த பாங்கும் பிடித்திருந்தது ; அதே சமயத்தில் இளையராசா ஆணவத்துடன் , வெறும் பாடல் வரிகளில் என்ன இருக்கு , என்று வைரமுத்துவை மாகிங் செய்து அவர் போல் பேசி அவரையே தாழ்த்திக் கொண்ட வீடியோ கிளிப்  நினைவிற்கு வந்து தொலைத்தது

4 comments:

  1. நாதஸ்வர சீரியல் காட்ச்சியை பார்க்க முடியவில்லை. மிகைப்படுத்தப்பட்ட கருத்தும், வசனமும், செயற்கை நடிப்பும்.. எந்த அளவு நாம் பார்க்கும் சீரியல்களின் தரம் தாழ்ந்துள்ளது என்பதையே காட்டுகிறது!

    ReplyDelete
  2. பாடல் பிறத்ந காரணக்க்ரு --ரசிக்கவைத்தது பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. நானும் வைரமுத்துவின் ரசிகன்தான்..அவருடைய ெழுத்துக்களின் எளிமை பாமரரையும் ரசிக்கவைக்கும்.

    ReplyDelete
  4. கவிதை வரிகளை வாழ்க்கைச் சம்பவத்துடன் இணைத்து அருமையாக எழுதியிருக்கிறீர்கள்

    ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)